“என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன்..!” – சிங்கமுத்து கோர்ட்டில் தமாஷ்..!
நடிகர் சிங்கமுத்துவை போலீசார் கைது செய்து, நேற்று மாலை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வேனில் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாஜிஸ்திரேட்டு வருகைக்காக சிறிது நேரம் கோர்ட்டு வளாகத்தில் சிங்கமுத்து வேனில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் போலீசாரிடம், “நான் சர்க்கரை நோயாளி, எனக்கு சில மாத்திரைகள் வேண்டும்” என்று கேட்டார். உடனே போலீசார் அந்த மாத்திரைகளை வாங்கி கொண்டு வந்து கொடுத்தனர்.
போலீஸ் வளையத்தையும் மீறி பத்திரிகை நிருபர்கள் சிலர் சிங்கமுத்துவிடம் பேட்டி கண்டனர். அப்போது சிங்கமுத்து சிரித்துக்கொண்டே, “என்னை ஜெயிலுக்கு அனுப்ப அவர் (வடிவேலு) ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன்..” என்று ஜோக் அடித்தார்.
“எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை பெறுபவர்கள், கடவுளின் ஆதரவை பெற்றவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் நான் இப்போது கொடுத்து வைத்துள்ளேன். கடவுள் வடிவேலுக்கு தண்டனை கொடுப்பார். செல்வாக்கு உள்ள ஒருவர் பொய் புகார் கொடுத்து யாரையும் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும்..” என்றும் சிங்கமுத்து கூறினார்.
“எத்தனை நாளைக்கு அவர் (வடிவேலு) இப்படி ஆட்டம் போடுவார் என்றும் பார்ப்போம். நான் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு இப்போது எந்த குறையும் இல்லை, ஜெயிலுக்கு போய் விட்டு வருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே சிங்கமுத்து நிருபர்களிடம் விடைபெற்றார்.
அவரது வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் பேசும்போது, “அரசியல் செல்வாக்கின் பின்னணியில் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம். இதில் மனித உரிமை மீறல் உள்ளது. ஜனநாயகத்துக்கு விரோதமாக பொய் வழக்கு போடப்பட்டு சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
ஆனால் சிங்கமுத்து கைது பற்றி கருத்து சொன்ன வடிவேலுவோ, "சட்டம், தன் கடமையை செய்திருக்கிறது`` என்றார்.
“என்னை சிங்கமுத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து அவர்களின் கடமையை இப்போது செய்திருக்கிறார்கள். காவல்துறைக்கு நன்றி.” என்றார் வடிவேலு.
0 comments:
Post a Comment